காவிரி நீர் விவகாரம்: விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் - அமைச்சர் நிர்மல் குமார்
காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியபோது, காவிரி நீரில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தை அணுக அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார். சட்டப்பூர்வமான வழிமுறைகள் மூலம் மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய நீரைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு தொடர்ந்து பின்பற்றாமல், தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை வழங்க மறுத்து வருவதாக அமைச்சர் குற்றம்சாட்டினார்.தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீர் பங்கை கிடைக்க விடாமல் தடுக்கவே கர்நாடகம் நீண்டகாலமாக அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மாநில விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்த தேவையான அனைத்து சட்ட வழிகளையும் தமிழ்நாடு அரசு முழுமையாக பயன்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சட்ட நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், மாநிலத்தின் விரிவான சட்டத் திட்டம் மற்றும் இறுதி முடிவுகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.அத்துடன், காவிரி நீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்றத்தை அணுகுவது, காவிரி தீர்ப்பாயத்தின் நடவடிக்கைகளை வலியுறுத்துவது, மாநிலங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது மற்றும் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட மற்றும் நிர்வாக வழிகளையும் அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.