கர்நாடகாவில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை; உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.பெங்களூருவின் மடிவாளா போலீஸ் எல்லைக்குட்பட்ட சிக்கா ஆடுகோடி பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதியரின் 2 வயது மகன், நேற்று முன்தினம் காலை குடியிருப்பின் 3-வது மாடி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது, இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்பின் மீது குழந்தை ஏறியதாகத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக, அங்கிருந்து குழந்தை கீழே உள்ள தரைத்தளத்தில் விழுந்தது.இந்த விபத்தில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் வருவதற்காக காத்திருக்காமல், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் குழந்தையை அழைத்துச் சென்று, கோரமங்கலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை தொடர்வதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மடிவாளா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றிருந்தாலும், நேற்று மாலை வரை இதுதொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.