கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் தொடரும் கொலைச் சம்பவங்கள் குறித்து சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கவலை
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கருத்துகளை பதிவு செய்தார்.அவர் பேசுகையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் மீது 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.அமுதன் கொலை சம்பவத்தை சாதாரண கும்பல் மோதலாகக் கருத முடியாது என்றும், போதைப்பொருள் கும்பல் குறித்து தகவல் தெரிவித்ததால்தான் அவர் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.மேலும், சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவர் தனுஷ் 30 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் கும்பலை எதிர்த்து கேள்வி எழுப்பிய இரண்டு இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.கோவை மாணவர் அமுதன் கொலையை தனிப்பட்ட சம்பவமாகவோ அல்லது கும்பல் பிரச்சினையாகவோ கருதி புறக்கணிக்க முடியாது என்றும், அரசின் அலட்சியமும் காவல்துறையின் பொறுப்பற்ற செயல்பாடுகளுமே இந்தக் கொலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.இந்த வழக்கில் தொடர்புடைய அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.