ஒரு தேர்வைக் கூட முறையாக நடத்த முடியாத மோடி அரசு; மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
மத்திய அரசின் தேர்வு நடத்தும் முறையை கடுமையாக விமர்சித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.அவரது பதிவில், தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தொடர்ந்து ஏற்படுத்தும் நிர்வாகக் குறைபாடுகளால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 87 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் இரவு பகலாக உழைத்து தேர்வுகளுக்குத் தயாராகும் நிலையில், மத்திய அரசின் நிர்வாகத் தோல்வியால் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.'எக்ஸாம் வாரியர்ஸ்' என மாணவர்களைப் பாராட்டும் பிரதமர் நரேந்திர மோடி, நடைமுறையில் மாணவர்கள் என்.டி.ஏ.வின் தவறுகளுக்கு எதிராகப் போராட வேண்டிய சூழல் ஏன் உருவாகியுள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தேர்வு அமைப்பின் குறைபாடுகளுக்கு முழுப் பொறுப்பும் என்.டி.ஏ.வுக்கே இருந்தாலும், அதற்கான பொறுப்பை மத்திய அரசு ஏற்காமல் தவிர்த்து வருவதாகவும், அதன் விளைவாக மாணவர்களே மனஅழுத்தத்தையும் சிரமங்களையும் எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்தபோதே பல்வேறுமுறைகேடுகள் நடைபெற்றதாகவும், மாணவர்களின் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அழுத்தத்திற்குப் பிறகு அவர் பதவியிலிருந்து விலகியதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அப்போது அவரைப் பாராட்டியதும் இதே பாஜக அரசுதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.தற்போது கல்வித் துறையை நிர்வகித்து வரும் பிரகலாத் ஜோஷியும் இந்த விவகாரத்துக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், தொடர்ந்து நடைபெற்று வரும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு அவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் தற்போதைய காலகட்டத்திலும் ஒரு தேர்வை முறையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தேசிய தேர்வு முகமை என்ற பெயருக்குப் பதிலாக, நம்பகத்தன்மையை இழந்த அமைப்பாகவே என்.டி.ஏ. செயல்படுகிறது என்றும், மாணவர்களை இன்னும் எவ்வளவு காலம் நிர்வாகத் தவறுகளுக்குப் பலியாக்கப் போகிறீர்கள் என்றும் தனது பதிவில் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.