எம்.எல்.ஏ. காரை கழுவிய தீயணைப்பு வீரர்கள்: வீடியோ வெளியானதால் சர்ச்சை
மத்தியபிரதேச மாநிலம் சிங்க்ராலியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்நிவாஸ் ஷாவின் தனியார் காரை, தீயணைப்பு வாகனத்தின் மூலம் தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிலவுஞ்சி பகுதியில் உள்ள எம்.எல்.ஏ.வின் அரசு இல்லத்திற்கு வெளியே இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோவில், தீயணைப்பு வாகனத்துடன் வந்த 3 பணியாளர்கள் குழாயை பயன்படுத்தி காரின் மீது தண்ணீரை பாய்ச்சி கழுவுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.அவசர காலங்களில் தீயை அணைக்கவும், மீட்புப் பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டிய தீயணைப்பு வாகனம் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டது எப்படி என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.மத்தியபிரதேச எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்கார், இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ. ராம்நிவாஸ் ஷாவை கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுமக்களின் வீடுகளில் தீ விபத்து ஏற்படும் சமயங்களில் தீயணைப்பு வாகனம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் நிலையில், தனியார் காரை கழுவுவதற்காக அந்த வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.இதுகுறித்து ராம்நிவாஸ் ஷாவிடம் கேட்கப்பட்டபோது, சம்பவம் நடந்த நேரத்தில் தான் வீட்டில் இல்லை என்றும், தனது காரை யார் கழுவச் செய்தார்கள் என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், தீயணைப்பு வாகனம் அங்கு வந்ததற்கான காரணத்தை மாநகராட்சி அதிகாரிகளிடமே கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.இதற்கிடையே, சிங்க்ராலி மாநகராட்சி ஆணையர் சவிதா பிரதான், இந்த சம்பவம் குறித்து தனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.இதனால், அரசு பயன்பாட்டுக்கான தீயணைப்பு வாகனம் தனியார் தேவைக்காக பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.