அரசுப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மஞ்சள்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு உதிர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மாணவர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் பள்ளியில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 24 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என இருவர் பணியாற்றி வருகின்றனர்.பள்ளிக் கட்டிடத்தின் முன்பகுதி ஏற்கனவே சேதமடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்தச் சூழலில், நேற்று மதியம் கட்டிடத்தின் முன்புற மேற்கூரையில் இருந்த சிமெண்டு பூச்சு திடீரென கீழே விழுந்தது.
இதனால் கட்டிடத்தின் இரும்புக் கம்பிகள் வெளிப்படையாகத் தெரிந்தன.அந்த நேரத்தில் மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்குள் இருந்ததால், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, வட்டாரக் கல்வி அலுவலர் பால் பாண்டி பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, மாணவ-மாணவிகள் நேற்று முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.