அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 13 பேர் பலி?
பொருளாதார சூழல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடல் வழியாக ஆபத்தான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல முயன்று வருகின்றனர். இத்தகைய பயணங்களின்போது படகு விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்கின்றன.இந்த நிலையில், வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து 15 பேர் அகதிகளாக இத்தாலிக்குச் செல்ல முயன்றுள்ளனர். இதற்காக அவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டனர்.துனிசியாவின் கடல் எல்லையை கடந்து படகு சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படகில் இருந்த 15 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் சிலர் நீரில் மூழ்கினர்.அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற மீன்பிடி படகில் இருந்தவர்கள், கடலில் தத்தளித்த 2 பேரை உயிருடன் மீட்டனர். மீதமுள்ள 13 பேரும் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, கடலில் மாயமான 13 பேரையும் கண்டுபிடிக்கும் பணியில் துனிசியா கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.