3 நாட்கள் பயணம்.. இன்று இரவு மேற்கு வங்கம் செல்கிறார் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூன்று நாள் பயணமாக இன்று இரவு மேற்கு வங்காளம் செல்கிறார். அங்கு பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்ற பிறகு, சனிக்கிழமை டெல்லி திரும்புகிறார்.சென்னை அருகே கோவளத்தில் இன்று நடைபெறும் தென் மண்டல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டுக்கு அமித் ஷா தலைமை தாங்குகிறார். மாநாடு நிறைவடைந்ததும், இரவு 8 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு மேற்கு வங்காளத்தின் சிலிகுரி அருகே உள்ள பாக்டோக்ரா விமான நிலையத்தை சென்றடைகிறார். பின்னர் சுக்னா பகுதிக்கு சென்று அங்கு இரவு தங்குகிறார்.நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்க உள்ளார். அதன் விவரம்:
* எஸ்.எஸ்.பி. எல்லைப் பாதுகாப்புப் படை தலைமையகத்துக்குச் சென்று வீரர்களுடன் கலந்துரையாடுகிறார்.
* பாதுகாப்புப் படை வீரர்களுடன் ‘பாரா கானா’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
* சிலிகுரி கவாகாலி மைதானத்தில் நடைபெறும் புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
* எல்லைப் பாதுகாப்பு மற்றும் புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டங்களுக்கு தலைமை வகிக்கிறார்.
* உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டங்களையும் நடத்துகிறார்.
சனிக்கிழமையும் அமித் ஷா பல்வேறு ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் பாக்டோக்ரா விமான நிலையத்தில் இருந்து அவர் டெல்லி புறப்படுகிறார்.
சிலிகுரி பகுதி, நேபாளம், பூடான் மற்றும் வங்கதேச எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான நிலப்பரப்பாக இது விளங்குவதால், அமித் ஷாவின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.