காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டம் ராசிமணல் பகுதியில் புதிய அணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் மாநிலம் தழுவிய நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் அளவு பாதிக்கப்படும் எனக் கூறி, தமிழகத்தில் மேகதாது திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேகதாது அணைக்கு மாற்றாக தமிழக எல்லைக்குள் உள்ள ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்டா மாவட்ட விவசாயிகள் சார்பில் மாநிலம் தழுவிய நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.
Advertisement
பாண்டியன் கூறியதாவது: “தமிழகப் பகுதியில் அமைந்துள்ள ராசிமணலில் அணை கட்ட வேண்டும் என்பதே எங்களது முக்கிய கோரிக்கை. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த ஆதரவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த கோரிக்கையை முன்வைத்து வரும் 20-ம் தேதி மாநிலம் தழுவிய நடைபயணம் தொடங்குகிறது. காவிரி கடலில் சங்கமிக்கும் பூம்புகாரில் இருந்து புறப்படும் நடைபயணம், டெல்டா மாவட்டங்கள் வழியாகச் சென்று திருவாரூரில் நிறைவடையும். மேலும், வரும் 23-ம் தேதி சென்னை எழும்பூரில் பிரசாரக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராசிமணல் அணை திட்டத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில், த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ளோம்” என்றார்.