ரக்ஷா பந்தன் நாளில் சோகம்; இறந்த சகோதரரின் கையில் ராக்கி கட்டிய தங்கை
ரக்ஷா பந்தன் நாளில், உயிரிழந்த சகோதரரின் கையில் அவரது தங்கை ராக்கி கயிறு கட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ரக்ஷா பந்தன் தினத்தில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி பாசத்தை வெளிப்படுத்துவது வழக்கம். சகோதரர்களும் தங்கள் சகோதரிகளுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக உறுதியளிக்கும் நாளாக இது கருதப்படுகிறது.தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் குரவியைச் சேர்ந்தவர் வீரண்ணா. இவரது மகன் ரமேஷ் (36). உடல்நலக்குறைவு காரணமாக வீரண்ணா கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.இந்நிலையில், அவரது மகன் ரமேஷும் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
நேற்று ரமேஷின் இறுதிச்சடங்கிற்காக அவரது உடல் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது.அப்போது அங்கு வந்த ரமேஷின் தங்கை தனலட்சுமி, தனது சகோதரரின் கையில் ராக்கி கட்டினார். “ராக்கி கட்டுவதற்கு முன்பே என்னை விட்டுச் சென்றுவிட்டாயா அண்ணா” என்று கதறி அழுதபடியே அவர் ராக்கி கயிற்றை கட்டிய காட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.10 நாட்களுக்குள் தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்ததால், அவர்களது குடும்பத்தினர் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.