யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது: நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வரி விதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்தம்) மசோதா-2026 தொடர்பான விவாதத்தின்போது, யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு நுகர்வோரிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் தி.மு.க. எம்.பி. வில்சன், கேரள எம்.பி. ஜான் பிரிட்டஸ் உள்ளிட்ட பலர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள மாற்றங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை மட்டுமே சார்ந்தவை என்றும், அவை நுகர்வோருக்கு கூடுதல் வரி அல்லது பரிவர்த்தனை கட்டணத்தை விதிக்கவில்லை என்றும் விளக்கினார்.மேலும், யு.பி.ஐ.
மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் நுகர்வோர் எந்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். அதேபோல், சிறு வணிகர்கள் மற்றும் மளிகைக் கடைக்காரர்களும் எம்.டி.ஆர். எனப்படும் வணிகர் தள்ளுபடி கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.நிர்மலா சீதாராமனின் பதிலுரைக்குப் பிறகு மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களவைக்கு மீண்டும் அனுப்பப்பட்டது. இந்த மசோதாவை மக்களவை ஏற்கனவே நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.