மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நாளை (செப்டம்பர் 17) வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி மதுரை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாளை காலை மற்றும் மதியம் பக்தர்களுக்கு உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சேதுபதி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் பணியாளர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் அமர்ந்து உணவருந்துவதற்கும் தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அன்னதானம் நடைபெறும் பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதற்காக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அன்னதான ஏற்பாடுகளுக்காக சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.