தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் 14 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 3 வாலிபர்களை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவப்பிரசாத் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவல் சரகங்கள் வாரியாக போலீசார் கண்காணிப்பையும் அதிகரித்துள்ளனர். இந்நிலையில், தூத்துக்குடி பகுதியில் விற்பனை செய்வதற்காக சிலர் கஞ்சாவை கடத்தி வருவதாக ஏ.என்.டி.எப். போதைப்பொருள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Advertisement
அப்போது, விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காந்தாரி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த காசிபாண்டி (22), திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் சரகத்துக்குட்பட்ட பள்ளிக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த ரமேஷ் (23), தாழையூத்து சங்கர்நகர் சாரதாம்பாள்நகரைச் சேர்ந்த ராஜகோபால் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.