முதலிடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து: தீர்மானத்திற்கு ஆதரித்த அனைவருக்கும் நன்றி - முதல்-அமைச்சர் விஜய்
தமிழ்நாட்டில் அரசு துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கும் வகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.தீர்மானத்தை முன்வைத்து பேசிய அவர், தமிழ்நாட்டின் அடையாளத்திலும் தமிழர்களின் உணர்விலும் தமிழ் மொழிக்கு இருக்கும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல என்றும், அது தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் இணைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிகழ்ச்சிகளில் முன்னுரிமை வழங்குவது மாநிலத்தின் உரிமை எனக் கூறிய முதல்-அமைச்சர் விஜய், அதன் மரியாதையை பாதுகாப்பதில் தவெக அரசு எந்த சமரசமும் செய்யாது என்றார். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்றும், இதனை அரசியல் விவாதமாக பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.திமுக சார்பில் பேசிய எம்.எல்.ஏ. கோவி.செழியன், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டும் என முதலில் அரசாணை பிறப்பித்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் என்றும், 2021 டிசம்பர் 17-ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கி அரசாணையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டதாகவும் அவர் கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியவரின் பெயரில் செயல்படும் பல்கலைக்கழகத்திலேயே அது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட சூழலை மாற்றுவதற்காக இதனை சட்டமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.அதிமுக சார்பிலும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பாடல் மட்டுமல்ல; அது தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்று குறிப்பிட்டார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல என்றும், தேசப்பற்றும் மொழிப்பற்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ் என்று வரும்போது அனைவரும் ஒரே குரலில் நிற்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன.இதையடுத்து, அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக முதலில் பாட வேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றியதற்கு முதல்-அமைச்சர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் என்பது மொழி மட்டுமல்ல; அது சிந்தனை, பண்பாடு மற்றும் நாகரிகத்தின் அடையாளம் என்றும், தமிழ் தமிழர்களின் உயிராகவும் உணர்வாகவும் இருப்பதை தமிழ்நாடு அரசு முழுமையாக உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை மற்றும் சிறப்பை போற்றுவதோடு, தமிழர்களின் உணர்வுகளையும் பாதுகாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் தமிழ்த்தாய்க்கு வழங்கப்படும் உயரிய மரியாதை என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் என்றும் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளித்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் உயரட்டும் என்றும், தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடர்ந்து முன்னேறட்டும் என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.