மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்ட பெண்கள்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு குருபூஜை விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பால், சந்தனம் மற்றும் மலர் காவடிகளை எடுத்துவந்து வழிபாட்டில் ஈடுபட்டனர். சிலர் பசுக்களுடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபடும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விரதம் மேற்கொண்ட பெண்கள் கோவிலுக்கு வந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய பந்தலில் நடைபெற்ற மகாயாகத்தில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.இதனைத் தொடர்ந்து, பிரசாதம் பெற்ற பெண்கள் அருகிலிருந்த குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து, மண்டியிட்ட நிலையில் கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் நிறைவேற பிரார்த்தனை செய்தனர்.மேலும், தங்களின் வேண்டுதல் நிறைவேறிய தம்பதியினர் குழந்தைகளுடன் வந்து துலாபாரம் செலுத்தினர்.
விழாவையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனுடன் நாடகம், இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கிராம தேவதையான பொன்னியம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன.