தெலுங்கானாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்ஐஆர் (SIR) நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி, நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு, வெங்கடேஷ், நடிகை சமந்தா ரூத் பிரபு உள்ளிட்டோர் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோருக்கும் தேர்தல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள சில தகவல்களில் எழுத்துப் பிழைகள் இருப்பது, பெற்றோர் பெயர்களில் முரண்பாடுகள் காணப்படுவது உள்ளிட்ட காரணங்களால் இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
அதேபோல், முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த தகவல்களையும் தற்போதைய பட்டியல் விவரங்களையும் இணைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து, அதில் உள்ள தவறுகளை சரிசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நடவடிக்கையின் போது வாக்காளர் விவரங்களில் சந்தேகம் அல்லது முரண்பாடு காணப்படும் நபர்களிடம் விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது.இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தகவல்கள் முறையாக சரிபார்க்கப்பட்டு, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.