பெரம்பூர் மக்களின் 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்: முதல்-அமைச்சர் விஜய்க்கு பொதுமக்கள் நன்றி
பெரம்பூர் தொகுதியில் கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெரு ஆகியவற்றை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால நீண்டநாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது.இரு தெருக்களுக்கும் இடையே முறையான சாலை வசதி இல்லாததால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதையடுத்து, கணபதி தெருவையும் ராமகிருஷ்ணன் தெருவையும் இணைக்கும் பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.பொதுமக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவின்பேரில் இரு தெருக்களுக்கும் இடையே பாதை ஏற்படுத்தப்பட்டு, புதிய சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.புதிய சாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதற்கும், பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காகச் சென்று வருவதற்கும் இருந்த சிரமம் குறைந்துள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கணபதி தெரு மற்றும் ராமகிருஷ்ணன் தெருவை இணைக்கும் சாலை அமைக்க வேண்டும் என்பது தங்களது 30 ஆண்டுகால கோரிக்கையாக இருந்ததாகவும், தற்போது அது நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த நடவடிக்கைக்காக முதல்-அமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர்.அதேபோல், பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், பழுதடைந்த மற்றும் எரியாத தெருவிளக்குகளை கண்டறிந்து சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், தேவையான இடங்களில் அனைத்து பகுதிகளிலும் சாலை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.