புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை – உணவுத்துறை முக்கிய தகவல்
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீதை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டு கோரி இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், விண்ணப்பத்துடன் கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீதை கட்டாயமாக இணைக்க வேண்டும் என சில வட்ட வழங்கல் அலுவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.ரேஷன் கார்டு கிடைத்த பிறகுதான் கேஸ் சிலிண்டர் இணைப்பை பெற முடியும் என்பதால், இந்த நடைமுறை காரணமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பலர் சிரமப்பட்டனர். இதுதொடர்பாக அரசுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் சென்றன.இதையடுத்து, உணவுப்பொருள் வழங்கல் துறை துணை கமிஷனர் ராகினி ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீதை கட்டாயமாக இணைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவ்வாறு ரசீதை இணைக்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்த பின்னர் 60 நாட்களுக்குப் பிறகே அது கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேநேரத்தில், விண்ணப்பத்துடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளையும் கட்டாயமாக பதிவேற்ற வேண்டும்.