பிரான்சில் கொந்தளிக்கும் காட்டுத்தீ; 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
பிரான்சின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள லேஜ் கேப்-பெரெட் கடலோர சுற்றுலா நகரை ஒட்டிய வனப்பகுதியில் இரவு நேரத்தில் கடுமையான காட்டுத்தீ பரவியது. பலத்த காற்றின் தாக்கத்தால் தீ வேகமாக விரிந்து, சுமார் 4,900 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.
இந்தச் சூழ்நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வந்த 8 சுற்றுலா முகாம்களில் தங்கியிருந்த பயணிகளும், வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்புகளில் வசித்த பொதுமக்களும் சேர்த்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நள்ளிரவில் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் கடுமையான வெப்பம் மற்றும் நீடித்த வறட்சி காரணமாக தீயை முழுமையாக அணைப்பதில் சிரமம் நிலவி வருகிறது.காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, இந்த ஆண்டில் மட்டும் பிரான்சில் 44 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.