பிரதமராக யார் வருவார்? கருத்துக்கணிப்பில் 3-வது இடம் பிடித்த தமிழக முதல்வர் விஜய்
2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் முதல் முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 தொகுதிகளுடன் 2-வது இடத்திலும், அ.தி.மு.க. கூட்டணி 53 தொகுதிகளுடன் 3-வது இடத்திலும் இருந்தது.ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை த.வெ.க.வுக்கு கிடைக்காத நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற அந்தக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவையும் பெற்று த.வெ.க. ஆட்சியமைத்தது.இதையடுத்து மே 10-ந்தேதி விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்றார். சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. பின்னர் அந்த அரசின் முதல் பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்களையும் த.வெ.க. நடத்தி வருகிறது.இந்த சூழலில், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பிரதமராக யாரை விரும்புகிறார்கள் என்பதை அறிய இந்தியா டுடே மற்றும் சி-வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் பிரதமர் தேர்வில் நரேந்திர மோடிக்கு 48.7 சதவீத ஆதரவும், ராகுல் காந்திக்கு 27.1 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளன. தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு 9.2 சதவீத ஆதரவு கிடைத்து 3-வது இடம் கிடைத்துள்ளது.திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 2 சதவீதமும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 1.7 சதவீதமும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளரான அபிஜீத் திப்கேவுக்கு 1.3 சதவீதமும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 1.2 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது. இவர்களைவிட விஜய் அதிக ஆதரவை பெற்றுள்ளார்.இதன்படி, பிரதமர் பதவிக்கான தேர்வில் 48.7 சதவீத ஆதரவுடன் நரேந்திர மோடி முதலிடத்திலும், 27.1 சதவீதத்துடன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 2-வது இடத்திலும் உள்ளனர். தேசிய அளவில் 9.2 சதவீத ஆதரவுடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.த.வெ.க.
ஆட்சிப் பொறுப்பேற்று 3 மாதங்களே ஆன நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர் ‘இன்றைய முதல்-அமைச்சர், நாளைய பிரதமர்’ என விஜய்யை குறிப்பிட்டு பேசி வரும் நேரத்தில் இந்த கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.அடுத்த பிரதமராக விஜய் வர வேண்டும் என த.வெ.க.வினர் தொடர்ந்து பேசி வருவது, அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், த.வெ.க.வினர் ரசிகர் மன்ற மனநிலையில் செயல்படுவதாக விமர்சித்துள்ளார். மேலும், ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.இதற்கிடையே தூத்துக்குடி மாநகரம் முழுவதும் விஜய்யை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சுதாகரின் புகைப்படத்துடன் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், ‘இன்றைய முதல்வர், நாளைய பிரதமர் விஜய்’ என்றும், ‘தூத்துக்குடி மத்திய மாவட்ட த.வெ.க.’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.சட்டசபையில் கடந்த 18-ந்தேதி பேசிய தமிழக மனிதவள மேலாண்மை அமைச்சர் சரத்குமார், முதல்-அமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை பாராட்டியதுடன், அவர் அடுத்த பிரதமராக வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பகலிரவு பாராமல் விஜய் உழைத்து வருவதால், அவர் நிச்சயம் அடுத்த பிரதமராக வருவார் என்றும் சரத்குமார் கூறினார்.இதற்கு முந்தைய நாள் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எதிர்காலத்தில் தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்றும், அந்த தலைவர் தமிழகத்தில் இருந்து வர வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியர்கள் அனைவரையும் பிரதிபலிக்கும் வகையிலும், அனைவரையும் சமமாக நடத்தும் வகையிலும் அந்த தலைவர் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக பதவி வகித்து சுமார் 30 ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த எச்.டி. தேவகவுடா 1996 முதல் 1997 வரை பிரதமராக இருந்ததே தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பதவியை வகித்த கடைசி நிகழ்வாகும். அதன் பின்னர் சுமார் மூன்று தசாப்தங்களாக தென் மாநிலங்களில் இருந்து ஒருவர் பிரதமராகவில்லை.இந்த பின்னணியில், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமே தங்களது இறுதி இலக்கு அல்ல என்றும், அதற்குப் பிறகும் த.வெ.க.வின் அரசியல் பயணம் தொடர வேண்டும் என்றும் அக்கட்சியினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.