படப்பிடிப்பில் காயம் அடைந்த பாலையாவை மருத்துவமனையில் சந்தித்த சந்திரபாபு நாயுடு
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா, தனது 111-வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கும் இந்தப் படத்தை ரித்தி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத்குமார், அபிமன்யு சிங், சுவாசிகா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா துறைமுகப் பகுதியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின் போது, பிரமாண்டமான சண்டைக் காட்சி எடுக்கப்பட்டது. அந்தக் காட்சியில் டூப் கலைஞரை பயன்படுத்தாமல் பாலகிருஷ்ணா நேரடியாக நடித்தபோது, எதிர்பாராத விதமாக கால் வழுக்கி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது இடது முழங்காலில் கடுமையான காயம் ஏற்பட்டது.விபத்துக்குப் பின்னர் அவர் உடனடியாக காக்கினாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக ஐதராபாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, இடது முழங்காலில் ஏற்பட்ட தசைக் கிழிவை சரிசெய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் பாலகிருஷ்ணா, முழுமையாக உடல்நலம் தேறிய பிறகு தனது 111-வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைய உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.இதற்கிடையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான பாலையாவை ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.