நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து - 34 பேர் பலி
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாட்டா பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 34 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று அந்த சுரங்கத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதன் தாக்கத்தால் சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
இருப்பினும், இந்த விபத்தில் 34 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.