தூத்துக்குடி: வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் பாலியல் சீண்டல் – பள்ளி வேன் டிரைவர் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளி வேன் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரை பெண்ணே துணிச்சலுடன் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கயத்தாறு தாலுகா மூர்த்தீஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் குமார் (23). இவர் கயத்தாறில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், சம்பவத்தன்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குமார், அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக சுதாரித்துக் கொண்டு குமாரை தாக்கியுள்ளார்.
பின்னர் தன்னை பாதுகாத்துக் கொண்டதுடன், அவரை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்துள்ளார். தொடர்ந்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குமாரை பிடித்து கயத்தாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கயத்தாறு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின் முடிவில், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் பள்ளி வேன் டிரைவர் குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.