திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் அர்ச்சனா கல்பாத்தி. இவரது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் நடிகரும், தற்போதைய தமிழக முதல்-அமைச்சருமான விஜய் நடித்த ‘பிகில்’, ‘கோட்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு சார்பில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதியான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் மாநிலக் குழுவில் அவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக உள்ள திருக்கோவில்களுக்கு பரம்பரை முறை சாராத அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து, உரிய பெயர் பட்டியலை தயாரித்து வழங்குவதற்காக இந்த மாநிலக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவின் தலைவராக பொம்மபுரம் ஆதீனம், மயிலத்தைச் சேர்ந்த தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (ஓய்வு) டாக்டர் கே.ராமநாதன் துணைத் தலைவராகவும், அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ப.ரா.சம்பத் (ஓய்வு), மா.சுமதி என்கிற சுமதிஸ்ரீ ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதவி வழி உறுப்பினர் மற்றும் செயலராக செயல்படுவார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.