திருவாரூரில் கனமழை: அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.டெல்டா மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திடீரென கனமழை பெய்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தின் நன்னிலம், குடவாசல், எரவாஞ்சேரி, வெள்ளை, அதம்பார், ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.கதிர்கள் முற்றி, இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.பயிர்களை வளர்க்க அதிக உழைப்பும் பணமும் செலவிட்ட நிலையில், அறுவடை நேரத்தில் பெய்த கனமழை தங்களது உழைப்பை வீணாக்கிவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற முடியாத சூழல் இருப்பதால், பயிர்கள் அழுகிவிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதத்தின் அளவை முறையாக கணக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.