திண்டுக்கல்லில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது; தற்காலிக பணிநீக்கம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து, அரசு மருத்துவமனையிலும் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டதுடன், தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி, கொடைக்கானல் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். பணியை முடித்துவிட்டு சென்ற அவர், மது அருந்திய நிலையில் கொடைக்கானல் அண்ணா சாலையில் நின்றிருந்த சில இளைஞர்களுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் தங்கப்பாண்டிக்கும் காயம் ஏற்பட்டது.இதையடுத்து சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சென்ற தங்கப்பாண்டி, அங்கு பணியில் இருந்த செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அவதூறான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த உபகரணங்கள் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கப்பாண்டியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தங்கப்பாண்டி உடனடியாக தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.