தமிழகத்தில் பருவ நெல் கொள்முதல் காலத்தை செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்க மத்திய அரசு அனுமதி
தமிழக விவசாயிகளிடம் இருந்து இந்திய உணவு கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் செய்யும் பணியை தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குகிறது. இதனுடன் தமிழக அரசும் ஊக்கத்தொகை அளித்து வருகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் அரிசியாக மாற்றப்பட்டு, பின்னர் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
வழக்கமாக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நெல் கொள்முதல் பருவம் நடைபெற்று வந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொள்முதல் பருவம் ஒரு மாதம் முன்னதாக மாற்றப்பட்டு, செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்கப்பட்டது.அதே நடைமுறையை பின்பற்றி, 2026-27-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவத்தையும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்க அனுமதி கோரி தமிழக உணவுத்துறை செயலர் அமுதா, மத்திய உணவுத்துறைக்கு கடந்த 8-ந்தேதி கடிதம் அனுப்பியிருந்தார்.இந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, தமிழகத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பருவ நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ந்தேதி முதல் தொடங்க நேற்று அனுமதி வழங்கியுள்ளது.தமிழகத்தில் எவ்வளவு நெல் கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து அரிசியாக எப்போது ஒப்படைப்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து செப்டம்பர் 1-ந்தேதி டெல்லியில் நடைபெறும் அனைத்து மாநில உணவுத்துறை செயலர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.