பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், இளைஞர் ஒருவர் உருவாக்கிய ஓட்டுநர் இல்லா கார் சோதனை ஓட்டத்தின்போது கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் வேன் மீது மோதிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.பாகிஸ்தானின் அபோதாபாத்தைச் சேர்ந்த 22 வயதான எஹ்சான் ஜாபர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர். இணையம் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரிமோட் மூலம் இயக்கக்கூடிய காரை அவர் உருவாக்கியுள்ளார். தனது தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பத்தை மதிப்பீடு செய்து, அது குறித்து செய்தி வெளியிடுமாறு பாகிஸ்தான் பத்திரிகையாளர் முகமது ஆலிஜாவிடம் அவர் கேட்டுக்கொண்டார்.இதையடுத்து கடந்த 30-ந்தேதி இஸ்லாமாபாத்தின் டி-சௌக் பகுதியில் அந்த காரின் தொழில்நுட்பம் குறித்து நேரலை பேட்டி நடத்தப்பட்டது. காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர் ஆலிஜா, அதன் சிறப்பம்சங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் காரின் கட்டுப்பாடு பாதிக்கப்பட்டு, அது திடீரென முன்னோக்கி சென்றது. உள்ளே இருந்த பத்திரிகையாளர் அவசரகால பிரேக்கை பயன்படுத்த முயன்றபோதும், காரை நிறுத்த முடியவில்லை. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்லாமாபாத் போலீஸ் வேன் மீது கார் பலமாக மோதியது.இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.
Advertisement
சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.‘பாகிஸ்தானில் திறமைக்கு பஞ்சமே இல்லை; ஆனால் இந்த திறமை நேராக போலீஸிடமே சென்று மோதிவிட்டது’ என சிலர் கிண்டல் செய்துள்ளனர். டெஸ்லாவின் ஆட்டோ-பைலட் தொழில்நுட்பத்துடன் இதை ஒப்பிட்டும் பல்வேறு மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன.மேலும், போலீஸாரை பார்த்ததும் லஞ்சம் கொடுப்பதற்காக கார் தானாகவே சென்று நின்றுவிட்டதாகவும் சிலர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த வீடியோவுக்கு நடிகர் ரன்வீர் ஷோரேயும் எதிர்வினையாற்றியுள்ளார். டெஸ்லாவின் தானியங்கி காருக்கு பாகிஸ்தானின் பதில் ‘மஸ்லா’ என அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு இணையவாசி, கார் மற்ற அனைத்தையும் தவிர்த்துவிட்டு நேராக போலீஸ் வேனில் சென்று மோதியிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் ஒருவர், இந்த சம்பவத்துக்குப் பிறகு போலீசாரிடம் அடி வாங்காமல் தப்பியது அதிர்ஷ்டம் என கேலி செய்துள்ளார்.எனினும், இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படுவதால், எஹ்சான் ஜாபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. அதே நேரத்தில், பொது சாலைகளில் இதுபோன்ற தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.