ஜப்பானில் பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளுக்கு ஆன்லைன் விற்பனை தடை: காரணம் என்ன?
ஜப்பானில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்திய நீச்சல் உடைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு பிரபல இணையவழி விற்பனை நிறுவனமான மெர்காரி தடை விதித்துள்ளது.
ஜப்பானின் மிகப்பெரிய ஆன்லைன் சந்தைகளில் ஒன்றான மெர்காரியில், தனிநபர்கள் புதிய மற்றும் பயன்படுத்திய பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் பயன்படுத்திய நீச்சல் உடைகளை இனி விற்பனைக்கு அனுமதிக்க முடியாது என அந்நிறுவனம் கடந்த ஆகஸ்டு 3-ம் தேதி அறிவித்தது.
ஜப்பானில் பள்ளிக் கல்வியின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் நீச்சல் உடைகள் அந்நாட்டில் 'ஸ்கூல் மிசுகி' என அழைக்கப்படுகின்றன. பொதுவாக கருப்பு அல்லது அடர் நீல நிறங்களில், எளிமையான வடிவமைப்புடன் இந்த உடைகள் தயாரிக்கப்படுகின்றன.சிறுவர்களுக்கான நீச்சல் உடைகளில் அரைக்கால் சட்டை போன்ற வடிவமும், சிறுமிகளுக்கு ஒன்-பீஸ் உடைகளும் இடம்பெறும். மாணவர்களின் பெயரை எழுதுவதற்கான இடம் பெரும்பாலான உடைகளில் இருக்கும். சில பள்ளிகளில் அந்தந்த கல்வி நிறுவனத்தின் சின்னமும் அச்சிடப்பட்டிருக்கும்.பள்ளி நீச்சல் உடைகள் அதிகளவில் அலங்காரத்தை விட பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. மேலும், பள்ளிக்கு வெளியே இதுபோன்ற உடைகளை அணிவது வழக்கமாக இல்லை.மாணவர்கள் இந்த நீச்சல் உடைகளை குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்துவதால், அவை பல நேரங்களில் நல்ல நிலையிலேயே இருக்கும்.
அதற்குள் குழந்தைகள் வளர்ந்து விடுவதால், அந்த உடைகளை தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் செலவைக் குறைக்க விரும்பும் குடும்பங்கள், பயன்படுத்திய நீச்சல் உடைகளை ஆன்லைன் சந்தைகளில் விற்பனை செய்வதையும் வாங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளின் விற்பனைக்கு மெர்காரி தடை விதித்துள்ளது. இதற்குப் பின்னால் உள்ள காரணத்தையும் அந்நிறுவனம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.பள்ளி நீச்சல் உடைகள் மீது ஜப்பானிய மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு தவறான ஆர்வம் இருப்பதாக மெர்காரி தெரிவித்துள்ளது. பள்ளிச் சீருடைகள் சிலரால் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுவது போலவே, பள்ளி நீச்சல் உடைகளும் பார்க்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.குறிப்பாக, ஏற்கனவே ஒருவர் பயன்படுத்திய நீச்சல் உடையாக இருப்பதே சில வாங்குபவர்களுக்கு முக்கிய ஈர்ப்பாக இருப்பதாகவும் மெர்காரி தெரிவித்துள்ளது. இதுபோன்ற நோக்கத்துடன் நடைபெறும் விற்பனை மற்றும் பரிவர்த்தனைகளை அனுமதிக்கப் போவதில்லை என்றும் நிறுவனம் எச்சரித்துள்ளது.தடையை மீறி பயன்படுத்திய பள்ளி நீச்சல் உடைகளை விற்பனை செய்ய முயற்சிக்கும் நபர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்றும் மெர்காரி அறிவித்துள்ளது.