கோழிக்கோடு அருகே மின் கம்பத்தில் கார் மோதி விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய செக்யூரிட்டி
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின் கம்பத்தில் அதிவேகமாக மோதியதில், அதன் அருகே அமர்ந்திருந்த ஹோட்டல் செக்யூரிட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.கோழிக்கோடு மாவட்டம் பெராம்ப்ரா-குட்டியாடி மாநில நெடுஞ்சாலையில் கடியாங்காடு பகுதியில் ‘காப் ரெஸ்டோ’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரவீந்திரன் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் ஹோட்டல் நுழைவாயிலுக்கு அருகே மின் கம்பத்தின் பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.அப்போது அந்த சாலையில் வேகமாக வந்த வெள்ளை நிற கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரம் அமர்ந்திருந்த ரவீந்திரனை நோக்கி கார் வேகமாக வந்ததைப் பார்த்த அவர், உடனடியாக நாற்காலியில் இருந்து எழ முயன்றார்.ஆனால், அதற்குள் கார் ரவீந்திரன் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே இருந்த மின் கம்பத்தில் நேராக மோதியது.
மோதலின் வேகத்தில் சிமெண்டால் ஆன மின் கம்பம் இரண்டாக உடைந்தது. அந்த மின் கம்பமே காரின் வேகத்தை தடுத்ததால், கார் ரவீந்திரன் மீது நேரடியாக மோதாமல் தவிர்க்கப்பட்டது.விபத்தின் அதிர்ச்சியில் ரவீந்திரன் நாற்காலியுடன் பின்னால் தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாமல் அவர் உயிர் தப்பினார்.இதனிடையே, கார் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. காரில் பயணம் செய்தவர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.