காமன்வெல்த் பளுதூக்குதலில் வெள்ளி வென்ற தமிழக வீரர்: ராஜா முத்துப்பாண்டிக்கு நடிகை சிம்ரன் பாராட்டு
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டியை, நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி பங்கேற்றார். சிறப்பாக செயல்பட்ட அவர் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.இந்நிலையில், இந்த சாதனை வீரரை நடிகை சிம்ரன் இன்று (புதன்கிழமை) நேரில் சந்தித்தார். அப்போது பூங்கொத்து வழங்கியதுடன், சால்வை அணிவித்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.இதுகுறித்து சிம்ரன் கூறுகையில், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று நாட்டின் பெருமையை உலக அளவில் எடுத்துச் சென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்துகள் என்றார்.
அவரது தற்போதைய வெற்றி ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், தொடர்ந்து கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று மேலும் பல சாதனைகளை அவர் படைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.சர்வதேச அளவில் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு திரைத்துறையினர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.