காங்கோவில் தீவிரமடையும் எபோலா பாதிப்பு: உயிரிழப்பு 930 ஆக உயர்வு
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அந்நாடு கடுமையான சுகாதாரச் சவாலை எதிர்கொண்டு வருகிறது. உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா, காங்கோவைத் தவிர உகாண்டா மற்றும் லைபீரியா உள்ளிட்ட பிற ஆப்பிரிக்க நாடுகளிலும் பதிவாகியுள்ளது.
எபோலா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் காங்கோ போன்ற பாதிப்பு அதிகமுள்ள நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.இந்த நிலையில், காங்கோவில் இதுவரை 2,344 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 930 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவலில் கூறப்பட்டுள்ளது. தொற்று தொடர்ந்து வேகமாக பரவி வருவதால், அதன் பரவலை கட்டுப்படுத்துவதில் காங்கோ சுகாதார அதிகாரிகள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.