கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 64 மில்லிமீட்டர் முதல் 115 மில்லிமீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதற்கிடையே, கேரளாவில் இந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 28 சதவீதம் அளவுக்கு மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை குறைந்ததன் காரணமாக கடந்த 2 மாதங்களாக வெப்பநிலை அதிகரித்ததுடன், மின் நுகர்வும் உயர்ந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.