பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தில் எல்.ஐ.சி. மேற்கொண்ட முதலீட்டில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனத்தில் எல்.ஐ.சி. சுமார் ரூ.3,900 கோடியை முதலீடு செய்திருந்தது. இந்த நிதி முறைகேடாகப் பிற நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.2,684.57 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இதுதொடர்பாக எல்.ஐ.சி. அளித்த புகாரைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணைக்காக வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், அதன் முன்னாள் தலைவர் அனில் அம்பானி, முன்னாள் நிர்வாக இயக்குநர் சதிஷ் சேத் மற்றும் அடையாளம் காணப்படாத அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என்று அனில் அம்பானி தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.