கனடா: சீக்கிய மத வழிபாட்டு தலத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 2 பேர் படுகாயம்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் எட்மன்டன் நகரில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தலமான குருத்வாராவில் அதிகாலை கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. இதில் பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.எட்மன்டன் நகரில் செயல்பட்டு வரும் இந்த குருத்வாராவுக்கு தினமும் ஏராளமான சீக்கியர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் 27 வயது இளைஞர் ஒருவர் குருத்வாராவுக்கு வந்தார். வழிபாடு செய்வதற்காக அவர் உள்ளே செல்ல முயன்றபோது, அதிகாலை நேரம் என்பதால் அனுமதி இல்லை என அங்கிருந்த இரு பாதுகாவலர்கள் தெரிவித்தனர்.இதனால் இளைஞருக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னிடம் இருந்த கத்தி மற்றும் ஸ்க்ரூடிரைவரை பயன்படுத்தி இரு பாதுகாவலர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 27 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.