காதலி கொடூரக் கொலை: தப்பியோடிய காதலனை சுட்டுப் பிடித்த போலீஸ்
டெல்லியின் திலக் நகர் பகுதியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவாக இருந்த அவரது காதலனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர்.மேற்கு டெல்லி திலக் நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான முஸ்கான் சர்மா கல்லூரியில் படித்து வந்தார். படிப்புடன் பகுதி நேரமாக மாடலிங் மற்றும் பேஷன் தொடர்பான கன்டென்ட் கிரியேட்டராகவும் பணியாற்றி வந்தார்.முஸ்கான் சர்மாவுக்கும், ஜிம் டிரெய்னராக வேலை செய்து வந்த இம்ரானுக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக காதல் உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இம்ரானின் போதைப்பொருள் பழக்கம் மற்றும் தவறான நடவடிக்கைகள் காரணமாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடனான உறவில் இருந்து முஸ்கான் விலக முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மாலை முஸ்கான் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற இம்ரான், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவர், ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முஸ்கானை வயிறு உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த முஸ்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் இம்ரான் அங்கிருந்து தப்பிச் சென்றார்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திலக் நகர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று முஸ்கானின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தலைமறைவான இம்ரானைத் தேடும் பணிக்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டன.சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், இம்ரானின் நடமாட்டத்தை கண்காணித்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லி புறநகர்ப் பகுதியில் இம்ரான் பதுங்கியிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது.இதையடுத்து அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்த போலீசார், இம்ரானை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல அவர் முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை கைது செய்தனர்.மேலும், முஸ்கானை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவமும், தலைமறைவாக இருந்த காதலன் போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.