ஈரோட்டில் ஒரு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்பு கம்பி அகற்றம்: அரசு மருத்துவர்கள் சாதனை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த இரும்பு கம்பியை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுமார் ஒரு மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். குமாரபாளையத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதுடன், உணவு சரியாக உட்கொள்ளாமல் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளது.இதையடுத்து பெற்றோர் குழந்தையை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டபோது, குழந்தையின் தொண்டையில் இரும்பு கம்பி சிக்கியிருப்பது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த மாதம் 24-ந்தேதி குழந்தையை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.