நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த இரும்பு கம்பியை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுமார் ஒரு மணி நேர அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். குமாரபாளையத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதுடன், உணவு சரியாக உட்கொள்ளாமல் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளது.இதையடுத்து பெற்றோர் குழந்தையை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டபோது, குழந்தையின் தொண்டையில் இரும்பு கம்பி சிக்கியிருப்பது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த மாதம் 24-ந்தேதி குழந்தையை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு மருத்துவக் குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தொண்டையில் சிக்கியிருந்த இரும்பு கம்பியை பாதுகாப்பாக அகற்றினர். தொடர்ந்து குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உடல்நலம் தேறிய நிலையில், நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.