இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப சிறப்பு ஏற்பாடு: மந்திரி உறுதி
இந்தியாவில் வசித்து வரும் இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு தேவையான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை பொதுப்பாதுகாப்புத் துறை மந்திரி ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் சொந்த நாட்டுக்கு திரும்பும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து இலங்கை அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிவித்தது. இதுதொடர்பாக பேசிய ஆனந்த விஜேபால, முறையான ஆவணங்கள் இல்லாமல் இலங்கையை விட்டு வெளியேறிய அகதிகள், சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அணுகி பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும் என கூறினார்.2002 முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 18 ஆயிரம் இலங்கை அகதிகள் இந்தியாவில் இருந்து மீண்டும் இலங்கை சென்றுள்ளனர். அதேவேளை, 1983-ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 90 ஆயிரம் அகதிகள் இந்தியாவில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதிக்கு முன்பு இலங்கையை விட்டு வெளியேறியவர்களில், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இல்லாதவர்கள் தற்காலிக பாஸ்போர்ட் மூலம் நாடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளன.அதன்படி, அகதிகள் இலங்கை திரும்புவதற்கு தேவையான ஆவணங்களை வழங்கி அரசு உதவி செய்யும் என ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு சோதனைகள் நிறைவடைந்த பிறகு தகுதி பெறும் அகதிகளை தாயகத்துக்கு அழைத்து வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இலங்கை குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில், தற்காலிக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக அவர்கள் நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.