அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.26.5 லட்சம் மோசடி: அச்சக ஊழியர் கைது
சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முரளி (39), தொழிலாளர் நலத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். இதை அறிந்த தமிழ்நாடு அரசு அச்சக ஊழியரான தாவீத் ராஜா (34), முரளியை அணுகியுள்ளார்.
தனக்கும், நிதித்துறையில் பணியாற்றும் தனது தாயாருக்கும் பல அரசு அதிகாரிகளை தெரியும் என்றும், ஏற்கனவே பலருக்கு அரசு வேலை பெற்றுத் தந்துள்ளதாகவும் தாவீத் ராஜா கூறியுள்ளார். மேலும், முரளிக்கு கல்வித்துறையில் டிரைவர் பணியும், அவரது மனைவிக்கு லேப் டெக்னீசியன் பணியும் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார்.இதற்காக இருவருக்கும் தலா ரூ.6.5 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சம் கேட்டுள்ளார். இதனை நம்பிய முரளி, 2 தவணைகளாக அந்த தொகையை தாவீத் ராஜாவிடம் வழங்கியுள்ளார்.தொடர்ந்து, முரளியின் தம்பி சிவா மற்றும் அவரது மனைவிக்கும் அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மேலும் ரூ.13.5 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
ஆனால், உறுதியளித்தபடி யாருக்கும் வேலை வாங்கித் தராமல் தாவீத் ராஜா காலம் கடத்தி வந்துள்ளார்.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முரளி, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் புகாரில் கூறப்பட்ட தகவல்கள் உண்மை என தெரியவந்ததைத் தொடர்ந்து தாவீத் ராஜா கைது செய்யப்பட்டார்.மேலும், மோசடி செய்த பணத்தில் பல்லாவரத்தில் நிலம் வாங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அந்த நிலத்துக்கான பத்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட தாவீத் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.