அமைச்சர் விஸ்வநாதன் பேச்சால் எழுந்த சலசலப்பு.. உடனே சபாநாயகர் சொன்ன வார்த்தை
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில், நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தின் மீது பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர்.நீட் விலக்கு தீர்மானம் தொடர்பாக அமைச்சர் விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்தபோது, தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் த.வெ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர்.இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் குறுக்கிட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக பேரவையில் நின்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க.
மற்றும் த.வெ.க. உறுப்பினர்களை எச்சரித்தார்.இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன், நீட் எதிர்ப்பு போராட்டக் களத்தில் ராகுல் காந்தி நிற்பதாக குறிப்பிட்டு அவரை பாராட்டிப் பேசினார். இதற்கும் தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் மீண்டும் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆவேசமாக பேசத் தொடங்கியதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை அமருமாறு அறிவுறுத்தினார். மேலும், “என்ன அவரோடு அமைச்சர் சண்டைக்கு வர்றீங்களா?” என்று கேட்டு உறுப்பினர்களை அமைதிப்படுத்தினார். இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர்.