அதிகாரத்தை வெளிப்படுத்த வேண்டாம்... பொதுமக்கள் நலனே முதன்மை
வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை
பொதுமக்கள் தேவையில்லாமல் அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய நிலை ஏற்படாத வகையில் செயல்பட்டு, அவர்களின் நலனை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தினார்.மும்பை நாரிமன் பாயிண்ட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வருமானவரித்துறையின் 13 மாடிக் கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தக் கட்டிடத்திற்கான அனுமதிகளைப் பெற வருமானவரித்துறை அதிகாரிகளே பல்வேறு துறைகளை அணுகி அலைந்ததாக குறிப்பிட்டார்.
அதிகாரமும் வலிமையும் கொண்ட ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே இத்தகைய அனுபவம் ஏற்பட்டிருந்தால், அலுவலகங்களை நாடி வரும் சாதாரண மக்களின் சிரமத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்றார்.எனவே, அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களை தேவையற்ற முறையில் அலைக்கழிக்கக் கூடாது என்றும், விதிமுறைகளை மீற வேண்டும் என்று தாம் கூறவில்லை; ஆனால் சட்ட வரம்புக்குள் இருந்து மக்களுக்கு உதவக்கூடிய அணுகுமுறையை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், நாட்டில் பலர் தங்களுக்குரிய சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுவதற்கே அதிக முயற்சி எடுக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்தக் கட்டிடம் அமைந்துள்ள நிலம் 1973 முதல் வருமானவரித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அப்பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். அவற்றை அகற்றும் நடவடிக்கைகளில் தாமதம் காட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.மேலும், மும்பையில் பணியாற்றும் வருமானவரித்துறையின் பெரும்பாலான அதிகாரிகள் வாடகை வீடுகள் அல்லது அரசு குடியிருப்புகளில் வசித்து வருவதாகக் கூறிய அவர், அவர்களுக்காக வீடுகள் கட்டித் தர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.