காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மவுலானா, அடுத்த 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட முடியாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அசன் மவுலானா போட்டியிட்டார். அந்த தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இதுதொடர்பாக 10 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.இந்த விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட ரூ.33 லட்சத்தை தேர்தல் செலவுக் கணக்கில் முறையாக பதிவு செய்யவில்லை எனக் கூறி, தேர்தல் கமிஷன் 2021-ம் ஆண்டிலேயே அசன் மவுலானாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு அவர் விளக்கம் அளித்திருந்தார்.தேர்தல் செலவுக் கணக்கை முறையாக சமர்ப்பிக்காதது தொடர்பாக, ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு 2023-ம் ஆண்டிலும் தேர்தல் கமிஷன் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
Advertisement
அதற்கும் அவர் பதிலளித்தார்.இதையடுத்து, 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அசன் மவுலானாவுக்கு தேர்தல் கமிஷன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.இந்த நிலையில், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தால், அசன் மவுலானாவை 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தேர்தல் கமிஷன் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.மேலும், தேர்தலில் அனுமதிக்கப்பட்ட ரூ.30 லட்சம் செலவு வரம்பை அவர் மீறியதாகவும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற விசாரணைகளில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.