2 லட்சம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன்; ஆடிப்பூர விழாவில் திரண்ட பக்தர்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அருள்மிகு உள்பேட்டை ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர்.விழாவின் ஒரு பகுதியாக வளையல்கள், தாலி, மஞ்சள், குங்குமம், பூக்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட சீர் வரிசைப் பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று அங்காளபரமேஸ்வரிக்கு படையலிட்டனர்.பக்தர்கள் சமர்ப்பித்த 2 லட்சம் வளையல்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள், “ஓம் சக்தி...
பராசக்தி” என்ற பக்தி முழக்கங்களுடன் அம்மனை தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து சுமங்கலி பூஜை மற்றும் மாங்கல்ய பூஜை நடத்தப்பட்டது. பின்னர் பூஜையில் பயன்படுத்தப்பட்ட வளையல்கள், மஞ்சள், தாலிக்கயிறு மற்றும் பூக்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.இந்த ஆடிப்பூர சிறப்பு விழாவில் உளுந்தூர்பேட்டையைச் சுற்றியுள்ள அரளி பாண்டூர், களமருதூர், நெமிலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.