₹1.34 லட்சத்தில் BSNL அறிமுகப்படுத்திய புதிய சாட்டிலைட் போன்! யார் வாங்கலாம்? என்னென்ன விதிமுறைகள்?
மொபைல் டவர் சிக்னல் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் அல்லது நடுக்கடல் போன்ற இடங்களிலும் தகவல் தொடர்பை உறுதிசெய்யும் வகையில் BSNL புதிய சாட்டிலைட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. வரியுடன் சேர்த்து இந்த சாதனத்தின் விலை ₹1,34,166 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண ஸ்மார்ட்போன் அல்ல; விண்வெளியில் இயங்கும் செயற்கைக்கோள்களுடன் நேரடியாக இணைந்து செயல்படும் சிறப்பு தகவல் தொடர்பு கருவியாகும். வழக்கமான செல்போன்கள் அருகிலுள்ள மொபைல் டவர்களின் சிக்னலை நம்பி செயல்படுகின்றன. ஆனால் இந்த சாட்டிலைட் போன், செயற்கைக்கோள் இணைப்பின் மூலம் செல்போன் நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் தடையின்றி குரல் அழைப்புகளை மேற்கொள்ள உதவுகிறது.
பேரிடர் காலங்கள் மற்றும் அவசர சூழ்நிலைகளில் இந்த சாதனம் முக்கிய பங்காற்றும் என BSNL தெரிவித்துள்ளது. இன்மார்சாட் உள்ளிட்ட சர்வதேச சாட்டிலைட் நெட்வொர்க் நிறுவனங்களின் சேவையுடன் இணைந்து இந்த வசதி வழங்கப்படுகிறது. இந்த போனில் சாட்டிலைட் இணைப்பு, தொலைதூர இடங்களிலிருந்தும் வாய்ஸ் கால் செய்யும் வசதி, அவசர உதவிக்கான SOS பொத்தான், நீண்ட நேரம் நீடிக்கும் சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் கடினமான சூழல்களையும் தாங்கக்கூடிய உறுதியான வடிவமைப்பு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்புப் படையினர், கடல்சார் பணியாளர்கள், பேரிடர் மீட்புக் குழுக்கள், சுரங்கத் தொழிலாளர்கள், தொலைதூர தொழிற்சாலைகளை நிர்வகிப்பவர்கள், புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் மற்றும் சாகசப் பயணிகள் போன்றோரின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதை யார் வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்த முடியாது. இந்தியாவில் சாட்டிலைட் போனை வாங்கவும் பயன்படுத்தவும் தொலைத்தொடர்புத் துறை (DoT) வழங்கும் முறையான அனுமதி கட்டாயமாகும். அனுமதியின்றி சாட்டிலைட் போனை வைத்திருப்பதோ அல்லது பயன்படுத்துவதோ இந்திய சட்டப்படி குற்றமாகும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள BSNL அலுவலகத்தை அல்லது 9768866652 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.