வெனிசுலாவுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்- டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையே உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, வெனிசுலாவில் உறுதி செய்யப்பட்டுள்ள 6,500 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பில் பெரும்பகுதி மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைப் பெறும் என கூறப்படுகிறது.அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ, பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வெனிசுலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 10,000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு கிடைக்கும் என்றும், இதன் மூலம் வெனிசுலா அரசுக்கு 20,900 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அமெரிக்க நிறுவனங்களும் வெனிசுலா அரசும் இணைந்து உருவாக்கும் புதிய தனியார் நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தியில் 55 சதவீதத்தை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்கான உரிமை நீண்ட காலத்திற்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்புகளை வெனிசுலா கொண்டுள்ளது. இருப்பினும், பல ஆண்டுகளாக நிலவி வரும் முதலீட்டு பற்றாக்குறை, மோசமான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக அந்நாடு தனது முழு எண்ணெய் உற்பத்தித் திறனை பயன்படுத்த முடியாமல் உள்ளது.இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் பெட்ரோல் விலை குறைவதற்கு உதவும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் வெனிசுலாவின் சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பை சீரமைத்து, உற்பத்தியை அதிகரிக்க பல ஆண்டுகளும் மிகப்பெரிய அளவிலான முதலீடும் தேவைப்படும். எனவே, இந்த ஒப்பந்தத்தின் காரணமாக உடனடியாக எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.