வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை: கிலோ ரூ.35-க்கு விற்பனை
இந்தியர்களின் அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக வெங்காயம் உள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் வெங்காய உற்பத்தி கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக நாடு முழுவதும் சில்லறை சந்தையில் வெங்காயத்தின் விலை சுமார் 59 சதவீதம் அதிகரித்துள்ளது.சென்னையிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்து, ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.இதனை கருத்தில் கொண்டு, மக்களுக்கு வெங்காயத்தை குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ ரயில் மூலம் 400 டன் வெங்காயம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.டெல்லி சென்றடைந்த வெங்காயத்தை இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் நாபெட் விற்பனை நிலையங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு சில்லறை விலையில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மானிய விலையில் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யும் பணியை நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும், டெல்லியைத் தொடர்ந்து சென்னை, மதுரை, எர்ணாகுளம் மற்றும் கவுகாத்தி ஆகிய நான்கு நகரங்களுக்கும் சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் வெங்காயத்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.