வீட்டில் விளையாடியபோது சோகம்: பாம்பு கடித்து 8 வயது சிறுவன் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது 8 வயது மகன் நிச்சிஷ், ஆவடி கவுரிபேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை நிச்சிஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் இல்லாததால் வீடு இருட்டாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வீட்டில் இருந்த பூனை திடீரென சத்தமிட்டு கத்தியது.இதையடுத்து பூனையை எடுக்க நிச்சிஷ் அருகில் சென்றுள்ளார்.
அப்போது பூனையை கடிக்க வந்த விஷப்பாம்பு சிறுவனை கடித்ததாக தெரிகிறது. பாம்பு கடித்ததில் அலறித்துடித்த சிறுவனை அவரது பெற்றோர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.