சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம்.அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் காலையிலேயே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை மற்றும் சன்ரைஸ் பாயின்ட் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதலே பலர் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.சூரிய உதயத்தை பார்த்த பிறகு, சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
Advertisement
மேலும், படகுத்துறையில் இருந்து படகுகளில் சென்று கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிட்டு வருகின்றனர்.இதுதவிர, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் அமைந்துள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயின்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.