விஜய் தேவரகொண்டா நடித்த ‘ரணபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ரணபாலி’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. வரலாற்றுச் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம், வரும் அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் ஏற்கனவே ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது மூன்றாவது முறையாக இந்த ஜோடி புதிய படத்திற்காக இணைந்துள்ளது.இப்படத்தில் ‘மம்மி’ உள்ளிட்டதிரைப்படங்களில் நடித்த அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் - அதுல் இசையமைக்கின்றனர்.1870-களில் நிலவிய பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் அந்தக் காலத்தின் பெரும் பஞ்சத்தை மையமாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தனது மக்களை காப்பாற்ற போராடும் புரட்சிகர வீரரைச் சுற்றியே கதைக்களம் நகர்கிறது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படம், பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படமாக தயாராகி வருகிறது.தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ‘ரணபாலி’ வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள நிலையில், ‘ரணபாலி’ திரைப்படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.